பாகிஸ்தானின் வடபகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட அந்நாட்டின் வடபகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 10 கிலோ மீட்டர் ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 5.8 அலகுகளாகப் பதிவானதாகவும், இது பஞ்சாப் மாகாணத்தின் மலைப் பிரதேச நகரமான ஜெஹ்லம் அருகே உணரப்பட்டதாகவும் பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், அந்நாட்டின் அறிவியல் துறை அமைச்சர் ஃபவாத் சௌதரி இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகுகளாகப் பதிவானதாகத் தெரிவித்தார்.
மேலும் படிக்க: தில்லி-என்.சி.ஆர். பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது
ஜியோ செய்தி சேனல் வெளியிட்ட தகவலின்படி, துணை ஆணையர் ராஜா கொய்சர் கூறுகையில், "இதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். பெண்கள், குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மிர்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மருத்துவமனைகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த செய்தி சேனல் தகவல் வெளியிட்டுள்ளது.
விமானம் மற்றும் மருத்துவ உதவிக் குழுக்களைக் கொண்ட ராணுவப் படைகள் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு விரைந்துள்ளதாக ராணுவத்தின் ஊடகப் பிரிவு டிவீட் செய்துள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளாட்சி நிர்வாகனத்தினருக்கு உதவும் வகையில், உடனடி மீட்பு நடவடிக்கைகளுக்கு அந்நாட்டின் ராணுவத் தலைமை தளபதி கொமர் ஜாவத் பாஜ்வா உத்தரவிட்டுள்ளார்.
நிலநடுக்கத்தில் சேதமடைந்த சாலைகள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் அந்த விரிசலில் சிக்கிக்கொண்டிருப்பது போன்ற காட்சிகளையே இதுகுறித்து செய்தி வெளியிடும் தொலைக்காட்சி சேனல்கள் காண்பிக்கின்றன.