பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, தில்லி உள்ளிட்ட வட இந்தியப் பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
இது தொடர்பாக, தேசிய நிலநடுக்க மைய அதிகாரி ஒருவர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதி அருகே, பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.3 ஆகப் பதிவானது. இதன் காரணமாக, ஜம்மு-காஷ்மீர், தில்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மாலை 4.33 மணியளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது.
இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் குவிந்தனர். இருந்தபோதிலும், நில அதிர்வு காரணமாக யாரும் பாதிக்கப்படவில்லை; உடைமைகளுக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக, பஞ்சாப் மாநிலத்தின் ஜிர்காபூரிலுள்ள பள்ளி மாணவர் ஒருவர் கூறுகையில், ""தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்தபோது, நாற்காலியும், மேஜையும் அதிர்வதை உணர்ந்தேன். உடனடியாக எனது வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தேன்'' என்றார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்த நில நடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலஅதிர்வு காரணமாக, அங்கு 20 பேர் உயிரிழந்தனர்.
300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அங்கு சாலைகள் பலவும் சேதமடைந்தன. இதனால், வாகனங்களும் சேதத்துக்கு உள்ளாகின.