மலேசியாவில் கரோனா பரவிய பிறகு, இன்று முதல் முறையாக ஒரே நாளில் 108 பேர் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக அந்த நாட்டின் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவல் குறித்து அந்த நாட்டின் நல்வாழ்வுத் துறை அமைச்சக பொது இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, புதன்கிழமையன்று 142 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,908 ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம், இதுவரை கரோனா பாதித்து சிகிச்சைக்குப் பின் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 645 ஆக உள்ளது. அதாவது 22:2 என்ற விகிதத்தில் கரோனா நோயாளிகள் குணமடைந்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், கரோனா பாதித்து இதுவரை 45 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 102 பேர் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.