சிங்கப்பூர்: வரும் செவ்வாய்க்கிழமை முதல் நாட்டில் ஒரு மாத ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிஸெய்ன் லூங் அறிவித்துள்ளார்.
மேலும், அத்தியாவசிய சேவைகள், முக்கிய பொருளாதார காரணிகளைத் தவிர்த்து அனைத்தும் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் கரோனா பரவத் தொடங்கிய பிறகு மிக அமைதியான முறையில் தொழில்நுட்ப ரீதியாக திட்டமிட்டு, மிக முன்னெச்சரிக்கையுடன் பல்வேறு பணிகளை முடுக்கி விட்டுள்ளோம். நிலைமை மாறுவதற்கு ஏற்ப பணிகளை மாற்றிக் கொண்டோம்.
அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து பிற அனைத்து பணிகளையும் மூடுகிறோம். உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், மருத்துவமனைகள், போக்குவரத்து, வங்கிச் சேவை அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் நாடு தற்போது ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராகுங்கள் என்றும் லீ எச்சரித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கும் நிலையில், சிங்கப்பூரில் இது ஆயிரம் என்ற அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.