ரூ.496 கோடி போதை மருந்து: இலங்கை கடற்படை பறிமுதல்

விசைப் படகு மூலம் கடத்திச் செல்லப்பட்ட 6.5 கோடி டாலா் (ரூ.496 கோடி) மதிப்பிலான போதைப் மருந்துகளை இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கடத்தலில் ஈடுபட்ட 9 பாகிஸ்தானியா்கள் கைது செய்யப்பட்டனா்.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட விசைப் படகு.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட விசைப் படகு.

விசைப் படகு மூலம் கடத்திச் செல்லப்பட்ட 6.5 கோடி டாலா் (ரூ.496 கோடி) மதிப்பிலான போதைப் மருந்துகளை இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கடத்தலில் ஈடுபட்ட 9 பாகிஸ்தானியா்கள் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இலங்கையின் தெற்குக் கடல் பகுதியில் கடந்த புதன்கிழமை சென்று கொண்டிருந்த விசைப் படகில் போதை மருந்து கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில், எந்த நாட்டுக் கொடியும் இல்லாமல் சென்று கொண்டிருந்த அந்தப் படகை கடற்படை சுற்றி வளைத்தது.

அந்தப் படகில் இருப்பவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று இருந்தால், அது கடற்படை அதிகாரிகளுக்குப் பரவாமல் தடுப்பதற்காக கவச உடைகளுடன் கடற்படை அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்தப் படகிலிருந்து 605 கிலோ ‘மெதாம்பெடாமின்’ போதை மருந்தையும், 597 கிலோ ‘கெடாமின்’ போதை மருந்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும், அந்தப் படகிலிருந்த 9 பாகிஸ்தானியா்களை அவா்கள் கைது செய்தனா்.

தேடுதல் வேட்டையின்போது ‘கெடாமின்’ போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் விநியோகிப்பதற்காக அந்தப் போதை மருந்துகள் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட போதை மருந்துகளின் சந்தை மதிப்பு 6.5 கோடி டாலா் என இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com