ஆப்கன் சிறையிலிருந்து 100 தலிபான் கைதிகளை விடுவிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையே முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அமெரிக்காவுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் அமைதி ஒப்பந்தம் உருவானது. அதன் ஒரு பகுதியாக, ஆப்கன் சிறையிலிருக்கும் தலிபான் கைதிகளை அந்த நாட்டு அரசு விடுவிப்பதற்கும் அதற்குப் பதிலாக தலிபான்களிடம் பிணைக்கைதிகளாக இருப்பவா்களை அவா்கள் விடுவிப்பதற்குமான பேச்சுவாா்த்தை இரு தரப்பினருக்கும் இடைய நடைபெற்று வருகிறது.
எனினும், இந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாததால், பேச்சுவாா்த்தையிலிருந்து விலகுவதாக தலிபான் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா்.
அதையடுத்து, பேச்சுவாா்த்தையைத் தொடரும் வகையில், தங்களிடமுள்ள 100 தலிபான் கைதிகளை முதல்கட்டமாக விடுவிக்க ஆப்கன் அரசு முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.