பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கான பெண்கள் பல துருக்கிய நகரங்களின் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
சமீபத்திய ஆண்டுகளில் துருக்கியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து துருக்கியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது அரசு போதிய நடவடிக்கை எடுப்பதில்லை என அந்நாட்டின் பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான ஐரோப்பிய கவுன்சில் ஒப்பந்தத்தில் இருந்து துருக்கி விலகக்கூடும் என்று செய்தி பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்நாட்டின் பெண்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
புதன்கிழமை நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த உடன்படிக்கைக்கு ஆதரவாக அணி திரண்டு, "பெண்கள் வன்முறையை மன்னிக்க மாட்டோம்", “ஐரோப்பிய கவுன்சில் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறக் கூடாது” என்று எழுதப்பட்டிருந்த பாதாகைகளுடன் பங்கேற்றனர்.
துருக்கியின் அங்காரா மற்றும் தெற்கு நகரங்களான அதானா மற்றும் அந்தல்யாவிலும் போராட்டங்கள் நடந்தன.
பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்காணிக்கும் உரிமைக் குழுவான விவில்ஸ்டாப் ஃபெமிசைட்ஸ் பிளாட்ஃபார்மின், கடந்த ஆண்டு துருக்கியில் 474 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், தென்மேற்கு மாகாணமான முக்லாவில் பினார் குல்டெக்கின் என்ற 27 வயது பெண் கொல்லப்பட்ட சம்பவம் போராட்டத்திற்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.