ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கரோனா வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் தலைநகர் ஆமதாபாத்தின் நவரங்கபுரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்தனர். 40 பத்திரமாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஆமதாபாத் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ .2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மேலும் நிலைமை குறித்து முதல்வர் விஜய் ரூபானி மற்றும் மேயர் பிஜால் படேல் ஆகியோரிடம் பிரதமர் கேட்டறிந்தார்.