இலங்கை நாடாளுமன்றத் தோ்தலில் இதுவரை அறிவித்த முடிவுகளின்படி, மகிந்த ராஜபட்சயின் இலங்கை பொதுஜன பெரமுணா கட்சி (எஸ்எல்பிபி) அபார வெற்றியடையும் நிலையில் உள்ளது.
சிங்களர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தெற்குப் பகுதியில் 16 இடங்களில் அதிகாரபூர்வமாக முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 16 இடங்களில் 13 இடங்களில் எஸ்எல்பிபி வெற்றி பெற்று, 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வென்று ராஜபட்ச கட்சியே ஆட்சிக்கும் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மகிந்த ராஜபட்சவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு ராஜபட்ச சுட்டுரைப் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
ராஜபட்ச சுட்டுரைப் பதிவு:
"உங்களுடைய (பிரதமர் நரேந்திர மோடி) தொலைபேசி வாயிலான வாழ்த்துக்கு நன்றி. இலங்கை மக்களின் பெரும் ஆதரவுடன், இருநாடுகளுக்கு இடையிலான நீண்டகால உறவை மேலும் மேம்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கியுள்ளேன். இலங்கையும், இந்தியாவும் நட்புறவு நாடுகள்." என்று ராஜபட்ச குறிப்பிட்டுள்ளார்.