அமெரிக்காவில் டிக்டாக் நிறுவனம் எதிர்காலத்தில் எப்படி இயங்கும் என்பது பற்றி இப்போது யாருக்கும் தெரியாது. ஆனால், அதன்மீது தடை விதிப்பதாக டிரம்ப் அரசு தெரிவித்ததை அடுத்து அதனை வாங்குவதில் லாபம் பெறும் செயல் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று பிபிசி, ராய்டர்ஸ் உள்ளிட்ட பல வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக எம் ஐ டி டெக்னாலஜி ரிவீவ்(MIT Technology Review) எனும் இதழின் செய்தியாளர் சார்லொத் ஜீ பிபிசி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், டிரம்பின் கூற்று வியக்கத்தக்கது. அவரது தந்திரம் மாஃபியாக்களின் செயல்களைப் போல் உள்ளது என்று தெரிவித்தார்.
டிக்டாக் விற்பனையிலிருந்து வலுக்கட்டாயமாக லாபம் கோரும் டிரம்பின் செயல், வரலாறு காணாத ஒன்று என்றும் இதனால் சட்டப் பிரச்சினை ஏற்படக் கூடும் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் 5ஆம் நாள் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஆஸ்திரேலிய தலைமை அமைச்சர் மோரிசன் 4ஆம் நாள் அமெரிக்காவின் ஆஸ்பென் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது பேசுகையில், ஆஸ்திரேலியாவில் டிக்டாக் மீது தடை நடவடிக்கையை மேற்கொள்வதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று கூறினார். அத்துடன், ஃபேஸ்புக் உள்ளிட்ட அமெரிக்காவின் சமூக தொடர்பு செயலிகள் பயனாளர்களிடமிருந்து பல தகவல்களைப் பெறும் என்பதால் ஆஸ்திரேலிய மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தை அமெரிக்கா அச்சுறுத்தி வரும் நிலைமையில், ஐரோப்பாவின் மூன்று முக்கிய பொருளாதாரச் சமூகங்கள் டிக்டாக் மீது தடை நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டம் இல்லை எனத் தெரிவித்துள்ளன.
தங்கள் நாடுகளில் டிக்டாக்கிற்குத் தடை விதிக்கும் திட்டம் இல்லை என்று பிரிட்டன் மற்றும் பிரான்சு அரசுகளின் செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தவிரவும் ஜெர்மன் அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், டிக்டாக் கொண்டு வரக் கூடிய இடர்ப்பாடுகள் எதையும் ஜெர்மனி கண்டறியவில்லை. இதனால் அதற்குத் தடை விதிக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்தார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்