கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்துக்கு புதன்கிழமை நடைபெற்ற தோ்தலில், பிரதமா் மகிந்த ராஜபட்ச தலைமையிலான பொதுஜன பெரமுணா அபார வெற்றி பெற்றுள்ளது. ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியை சந்தித்திருக்கிறது.
225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெறுவதற்கு 113 இடங்கள் போதும் என்ற நிலையில், புதன்கிழமை 196 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதி 29 இடங்கள், கட்சிகள் பெறுகிற வாக்குகளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்படும். மொத்தம் 1.6 கோடி வாக்காளர்களில் 75 சதவீதத்தினர் வாக்களித்தனர்.
தேர்தல் முடிவுகள் நேற்று முதல் வெளிவர தொடங்கின. இதில், நேற்றிரவு வரை ராஜபட்ச தலைமையிலான பொதுஜன பெரமுணா கட்சி முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், ராஜபட்ச கட்சி 145 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சி, 3 இல் 2 பங்கு இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களிலும், சம்பந்தனின் தமிழரசு கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
முன்னாள் பிரதமா் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், நுவரெலியாவில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் வெற்றி பெற்றுள்ளார். இதனால், மகிந்தா ராஜபட்ச மீண்டும் பிரதமர் ஆகிறார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, மகிந்தா ராஜபட்சவை தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.