இலங்கை பொதுஜன பெரமுனா கட்சித் தலைவர் மகிந்தா ராஜபட்ச 4-வது முறையாக இலங்கைப் பிரதமராக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார்.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், மகிந்தா ராஜபட்சவின் கட்சி 145 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள புத்தர் கோயிலில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், புதிய பிரதமராக மகிந்தா ராஜபட்ச பதவியேற்றுக் கொண்டார். இந்தப் பதவியேற்பு விழாவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
ராஜபட்சவின் அமைச்சரவை இந்த வாரத்தில் பதவியேற்கவுள்ளது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்ததன்படி, ஆகஸ்ட் 20-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது.