கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால் பூடான் நாடு முதல் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
உலகளவிலான கரோனா பரவலால் பல்வேறு நாடுகள் முழு ஊரடங்கை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. பதிவாகும் கரோனா தொற்று எண்ணிக்கையின் அடிப்படையில் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தும், தேவை உள்ள பகுதிகளில் முழு ஊரடங்கை செயல்படுத்தியும் வருகின்றன.இந்த நிலையில் பூடான் நாடானது நாடு தழுவிய முதல் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
குவைத்திலிருந்து பூடானுக்குத் திரும்பிய 27 வயதான பெண்மணி கட்டாய தனிமைப்படுத்துதலில் இருந்தார்.இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை தனிமைப்படுத்துதல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாடு தழுவிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு 5 முதல் 21 நாள்கள் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.இதனைத் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டன. இதுவரை 7 லட்சத்து 50 ஆயிரம் பொதுமக்கள் வீடுகளில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பூடானில் இதுவரை 113 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.