காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள இந்தியா தயங்குவதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் தெரிவித்துள்ளார்.
உலக வெப்பமயமாதலில் நிலக்கரி பயன்பாடு முக்கியப்பங்கு வகித்து வருகிறது. இதன்காரணமாக உலகநாடுகள் புதைபடிம எரிபொருள் தேவையை தவிர்க்க ஐநா அவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய ஐநா அவையின் பொதுச்செயலாளர் இந்தியா விரைவாகவும் நிரந்தரமாகவும் நிலக்கரி பயன்பாட்டில் இருந்து வெளியேற வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “இந்தியாவில் நிலக்கரி பயன்பாடு படிப்படியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், புதைபடிவ எரிபொருள் மானியங்கள் முடிவுக்கு வரப்பட வேண்டும். எரிபொருள் தேவைக்காக நிலக்கரி பயன்பாட்டை நம்பியிருப்பதை இந்தியா கைவிட வேண்டும்.” என்று அன்டோனியோ குடெரெஸ் வலியுறுத்தினார்.
புதைபடிம எரிபொருள் தேவையை குறைத்துக் கொண்டால் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா உலகளாவிய வல்லரசாக மாறும் என அவர் தனது உரையில் தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள மோடி தலைமையிலான அரசு தயங்குவதாகக் குறிப்பிட்ட குடெரெஸ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் முதலீடு வீழ்ச்சியடைந்த நிலையில் கூட புதிய நிலக்கரி எரி மின் உற்பத்தியை அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது எனக் கவலை தெரிவித்தார்.
முன்னதாக சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் புதிய வேலைவாய்ப்புகளுக்காக நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவது காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையில் தொய்வை ஏற்படுத்துகிறது என கருத்தரங்கில் சுட்டிக்காட்டப்பட்டது.
நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் முதலீடு செய்வதை நிறுத்த ஜப்பானைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் ஐநா அவையின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.