லெபனானின் புதிய பிரதமராக ஜெர்மனிக்கான அந்த நாட்டுத் தூதர் முஸ்தஃபா ஆதிப் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெய்ரூட்டில் ஆகஸ்ட் 4-ம் தேதி நிகழ்ந்த வெடிவிபத்து சம்பவத்தால், ஹசன் தியாப் தலைமையிலான அரசுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அழுத்தம் காரணமாக ஆகஸ்ட் 11-ம் தேதி ஹசன் தியாப் தலைமையிலான அரசு ராஜிநாமா செய்தது.
இதைத் தொடர்ந்து, ஜெர்மனிக்கான லெபனான் தூதர் முஸ்தஃபா ஆதிப் தற்போது பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். 128 நாடாளுமன்ற வாக்குகளில் 90 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லெபனான் அதிபருடனான சந்திப்புக்குப் பிறகு ஆதிப் தெரிவிக்கையில், "லெபனான் மக்கள் நிகழ்காலம் குறித்தும், எதிர்காலம் குறித்தும் கவலையில் உள்ளனர். சீர்திருத்தங்களை செயல்படுத்த தொழில்முறை நபர்களுடன் இணைந்து அரசை அமைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்றார்.
பெய்ரூட் வெடிவிபத்தால் பலியானோரின் எண்ணிக்கை 190 ஆக உள்ளது. 6,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடற்றவர்களாகவும், கதவு ஜன்னல் அல்லாத வீடுகளில் வசிக்கும் நிலையிலும் உள்ளனர்.