2020ஆம் ஆண்டின் இறுதியில் லெபனான் நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோர் உணவுப் பஞ்சத்தைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாக ஐநா அவையின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் எச்சரித்துள்ளது.
கரோனா பரவலால் ஏற்கெனவே உலக நாடுகள் பலவும் தங்களது பொருளாதார நடவடிக்கையில் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. தொற்றுப் பரவலின் காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்க நடவடிக்கையால் பல்வேறு நாட்டின் வணிக நடவடிக்கைகள் மீள முடியாத சிக்கலில் சிக்கியுள்ளன.
இந்நிலையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக லெபனான் நாட்டில் உள்ள மொத்தமக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நடப்பாண்டு இறுதியில் கடுமையான உணவுப் பஞ்சத்தை சந்திக்கும் அபாயத்தில் உள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை ஐக்கிய நாடுகள் அவையின் மேற்கு ஆசிய பொருளாதார மற்றும் சமூக ஆணையம் தெரிவித்துள்ளது.
”லெபனானில் உணவுப் பாதுகாப்பு” என்னும் தலைப்பின்கீழ் அறிக்கை வெளியிட்ட ஐநா, “லெபனானின் முக்கிய துறைமுகமான பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தால் உணவுதானிய இறக்குமதி தடைப்பட்டுள்ளது. பெரும்பாலும் உணவு தானியத் தேவையில் இறக்குமதியைச் சார்ந்துள்ள லெபனானுக்கு இது மோசமான செய்தியாகும்.” எனத் தெரிவித்துள்ளது.
மேலும் தானிய சேமிப்புகளை அதிக்கப்படுத்த வேண்டிய கட்டாயத்தை லெபனான் அரசு உணர வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது.
"உணவு விலை கண்காணிப்பை தீவிரப்படுத்துதல், உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து நுகர்வோருக்கு நேரடி நடைபெறும் விற்பனையை ஊக்குவித்தல் போன்ற உணவு நெருக்கடியைத் தடுக்கத் தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்று ஐநா வலியுறுத்தியுள்ளது.
மேலும் லெபனானில் 2019 ஆம் ஆண்டில் 2.9% ஆக இருந்த பணவீக்கம் 2020 ஆம் ஆண்டில் 50%க்கும் மேல் இருக்கும் என்று ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருந்ததை விட சராசரி உணவு விலை 141% அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் ஏறத்தாழ 68.5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தால் நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.