தென்கொரியாவில் 6 அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்பட 8 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவிலிருந்து நவம்பர் 17 முதல் டிசம்பர் 1-ஆம் தேதி வரையிலான தேதியில் தென்கொரியா வந்த ஆறு வீரர்கள் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பியோங்டேக் பகுதியிலுள்ள அமெரிக்க ராணுவ கேரிசன் ஹம்ப்ரிஸ் மற்றும் ஓசன் விமான தளத்திலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் மூலம் தென்கொரியாவிலுள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் மக்கள் என மொத்தம் 391 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் புதிதாக 540 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,703-ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 529-ஆக அதிகரித்துள்ளது.