நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலம், அங்கிருந்து பாறைகள் மற்றும் பிற பொருள்களுடன் பூமியை நோக்கிப் புறப்பட்டது.
இதுகுறித்து சீன தேசிய விண்வெளி ஆய்வு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிலவைச் சுற்றி வந்துகொண்டிருந்த சாங்கி-5 விண்கலத்தின் பாதை பூமியை நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பப்பட்டது.
அந்த விண்கலத்திலிருந்த 4 என்ஜின்கள் 22 நிமிடங்களுக்கு இயக்கப்பட்டதில், அதன் சுற்றுவட்டப் பாதை பூமியை நோக்கித் திரும்பியது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலவிலிருந்து கற்கள், பாறைகளை பூமிக்குக் கொண்டு வந்து ஆய்வுகள் மேற்கொள்வதற்கான சீனாவின் சாங்கி-5 விண்கலம், கடந்த மாதம் 24-ஆம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டது.
அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக இத்தகைய திட்டத்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா நிறைவேற்றி வருகிறது.
கடந்த 1-ஆம் தேதி நிலவில் சாங்கி-5 ஆய்வுக்கலம் பத்திரமாகத் தரையிறங்கியது. அங்கு கற்கள், பாறைகள் போன்றவற்றை சேகரித்த அந்த ஆய்வுக் கலம் நிலவுப் பரப்பிலிருந்து 3-ஆம் தேதி புறப்பட்டு, நிலவைச் சுற்றிக் கொண்டிருந்த விண்லத்துடன் கடந்த வாரம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.