பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 69,826 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் பிரேசில் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகளவில் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் புதிதாக 69,826 பேருக்குப் பாதிப்பும், 1,092 பேர் பலியும் பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த நாட்டில் மொத்த பாதிப்பு 7,11,0,434 ஆகவும், உயிரிழப்பு 1,84,827 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதேசமயம் இதுவரை 6,177,702 பேர் தொற்று பாதித்துக் குணமடைந்துள்ளனர். 7,48,949 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும், 8,318 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சாவ் பாலோ மாநிலத்தில் 2021 பிப்ரவரி மாதத்தில் சமூக இடைவெளியுடன் கல்வி நிறுவனங்கள் தொடங்க அந்நாடு முடிவு செய்துள்ளது. மேலும், ரியோ டி ஜெனிரோ மாநிலத்தில் சுற்றுலாத் தலமான புஜியோஸை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.