பெய்ஜிங்: சீனாவில் கடுங்குளிர் நிலவி வருவதால் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சீனாவில் கடந்த சில நாள்களாக கடுங்குளிர் நிலவி வருகின்றது. நீர்வீழ்ச்சிகள் உறைந்து பனிக்கட்டியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய மற்றும் கிழக்கு சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு, வடகிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு சீனாவில் சில பகுதிகளில் வெப்பநிலை 12 முதல் 16 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது.
மேலும், என்.எம்.சியின் கணிப்பின்படி, கிழக்கு மற்றும் தெற்கு சீனாவிற்கு அருகிலுள்ள சில கடல் பகுதிகளிலும் கடுமையான குளிர் நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
கடுங்குளிர் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.