லண்டன்: அதிதீவிர கரோனா தொற்றுப் பரவி வருவதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்ட போதும், மருத்துவமனைகள் அனைத்தும் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.
பிரிட்டனின் தெற்கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட அதிதீவிர கரோனா தொற்று, பழைய கரோனா வைரஸைக் காட்டிலும் அதிவேகமாகப் பரவும் என்று தெரிய வந்தது.
இந்த நிலையில், அதிதீவிர கரோனா கண்டறியப்பட்ட பகுதியில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டத்துக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகள் மூடப்பட்டுள்ளன. உணவகங்களும் பார்சல்கள் வழங்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
லண்டன் மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில் கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளை அனுமதிக்க போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், ஆம்புலன்ஸ்களில் கொண்டு வரப்படும் நோயாளிகள் மருத்துவமனைக்குள் கொண்டு செல்ல முடியாமல், மருத்துவமனை வாயில்களில் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
மறுபக்கம் சுகாதார ஊழியர்கள் பலரும் கரோனா பாதித்து அல்லது தனிமைப்படுத்துதலில் இருப்பதால் போதிய ஊழியர்கள் இல்லாமல் மருத்துவமனைகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளன.
பிரிட்டனில் செவ்வாயன்று புதிதாக 53,135 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 414 பேர் பலியாகினர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்குப் பிறகு இந்த எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது.
ஒரு செவிலியர் இது பற்றி கூறுகையில், சுகாதாரப் பணியாளர்கள் பலரும் கடுமையான பணி அழுத்தத்துக்குள்ளாகியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுபோன்ற நிலை ஏற்பட்டபோது, அது முடிந்துவிட்டதாகவே நினைத்தோம். உண்மையில் நாங்கள் தற்போது கரோனாவின் மூன்றாவது அலையை எதிர்நோக்கியுள்ளோம். இது நிச்சயம் மிகக் கடினமாக இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார்.