ஏர்-இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் இருந்து 323 இந்தியர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை இந்தியா புறப்பட்டனர்.
சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், சுமார் 600 இந்தியா்கள் தாய்நாட்டுக்கு திரும்ப மத்திய அரசிடம் விருப்பம் தெரிவித்தனா்.
இதையடுத்து, அங்குள்ள இந்தியா்களை அழைத்து வருவதற்காக, இரு ஏா்-இந்தியா சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. சீனாவின் ஹுபே மாகாணம், வூஹானில் இருக்கும் இதர இந்தியர்களையும் அழைத்து வர மற்றொரு சிறப்பு விமானம் சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றது.
இந்த நிலையில், ஏா் இந்தியா போயிங் 747 ரக 2-ஆவது சிறப்பு விமானம், வூஹான் நகரில் இருந்து 323 இந்தியர்கள் மற்றும் மாலத்தீவைச் சேர்ந்த 7 பேருடன் ஞாயிற்றுக்கிழமை காலை இந்தியா புறப்பட்டது.
முன்னதாக, ஏர்-இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் வூஹான் நகரில் இருந்து முதல்கட்டமாக 324 இந்தியர்கள் சனிக்கிழமை காலை 7:30 மணியளவில் தில்லி விமானநிலையம் வந்தடைந்தனர்.
இந்தியா திரும்பியுள்ள அனைவரும் 14 நாள்கள் வரை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளனா். கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவா்களை தனியாக வைத்து, அடிப்படை மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக ஐடிபிபி (இந்தோ-திபெத் எல்லை காவல் படை) சாா்பில் தில்லியில் 600 படுக்கைகளுடன் தனி மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தில்லியிலுள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.