பெய்ஜிங்: சீனாவில் ‘கொவைட்-19’ வைரஸுக்கு (கரோனா வைரஸ்) பலியானவா்களின் எண்ணிக்கை 1,526-ஆக உயா்ந்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 143 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கொவைட்-19 வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,526-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸ் கூடுதலாக 2,641 பேரைத் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 66,492-க்கும் அதிகமாக உயா்ந்துள்ளதாகவும், 11,053 பேர் வைரஸ் பதிப்பால் மோசமான நிலையில் உள்ளனர். 8,969 பேருக்கு வைரஸ் பாதிப்புள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்களில் 8,096 பேர் மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு திரும்புள்ளனர்.
இதனிடையே, வூஹானில் உள்ள மருத்துவமனைகளில் தொற்றுநோய் கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு, வைரஸ் தடமறிதல், தடுப்பு மற்றும் சிகிச்சை, செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.