குழந்தை பாலியல் படங்கள் தொடர்பாக பெரியளவில் நடைபெற்ற சர்வதேச தேடுதல் வேட்டையின் அடிப்படையில் 4 நாடுகளைச் சேர்ந்த 43 பேர் பிரேசில் ஃபெடரல் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக பிரேசில் காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,
579 அதிகாரிகள் அடங்கிய குழு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு எதிரான 6ஆம் கட்ட நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் குழந்தைகளை பாலியல் படங்களில் நடிக்க வைத்தது தொடர்பானவர்கள் இருப்பதாக சுமார் 112 பகுதிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவற்றில் 12 சம்மன் பிரேஸில் நாட்டிலுள்ள சௌ பாலோ, சாண்டா காத்ரீனா, பரானா, மடோ குரோஸோ டூ சல் உள்ளிட்டப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது.
இதில் அதிகபட்சமாக சௌ பாலோ நகரில் 19 பேர் கைது செய்யப்பட்டனர், சாண்டா காத்ரீனாவில் 9 பேரும், பரானாவில் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி அமெரிக்கா, கொலம்பியா, பனாமா, பாரகுவோ ஆகிய நாடுகளும் இந்த நடவடிக்கையில் கூட்டாக ஈடுபட்டு, தாங்கள் நாட்டிலுள்ள பகுதிகளுக்கு சம்மன் அனுப்பியது.
இந்த நிலையில், குழந்தை பாலியல் படங்களை தயாரித்தது, விநியோகித்தது மற்றும் குழந்தை பாலியல் தொழிலாளர்களை அடைத்து வைத்திருந்தது தொடர்பாக மொத்தம் 43 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
கைப்பற்றப்பட்ட 1,87,000 ஆவணங்களை ஆய்வு செய்த பின், அதன் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் குழந்தை பாலியல் படங்கள் தொடர்பாக இதுவரை மொத்தம் 640 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.