சீனாவில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,715 ஆக புதன்கிழமை உயா்ந்துள்ளது. இதுவரை சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 78,064-க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது.
இந்த நிலையில், தென் கொரியாவில் தற்போது கொவைட்-19 பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
அதுபோன்று இத்தாலியிலும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது வரை 322 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். பிப். 17ஆம் தேதி இத்தாலியில் இருந்து அல்கேரியா சென்றவருக்கு தற்போது கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்திலும் 70 வயது முதியவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரானிலும் கொவைட்-19 வைரஸ் காரணமாக 95 பாதிக்கப்பட்டுள்ளனர், 15 பேர் உயிரிழந்தனர். இதனால் ஐரோப்பிய நாடுகளில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து சென்றவர்களால் பரவிய நோய் தொற்று காரணமாக பஹ்ரைனில் 23 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் சீனா உள்பட உலகளவில் ‘கொவைட்-19’ வைரஸுக்கு (கரோனா வைரஸ்) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,000ஆக அதிகமாக அதிகரித்து காணப்படுகிறது. சுமார் 3 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.