இராக்கில் அமெரிக்க ராணுவ முகாம், அமெரிக்க தூதகரம் ஆகியவற்றின் மீது ராக்கெட் குண்டு தாக்குதலுக்கும், ஏவுகணை தாக்குதலும் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்டது.
இராக் தலைநகா் பாக்தாதில் உள்ள விமான நிலையத்துக்கு வெளியே அமெரிக்கா வெள்ளிக்கிழமை நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஈரானின் முக்கியப் படைத் தலைவா் காசிம் சுலைமாணி உயிரிழந்தாா்.
அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சி ராணுவனத்தின் காத்ஸ் படைப் பிரிவு, இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
1979-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பிணைக் கைதிகளாக இருந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை 52-ஆக இருந்ததைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக 52 ஈரானிய தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டதாவது, அமெரிக்கர்களைக் கொன்றது மற்றும் கடுமையாகத் தாக்கியது என இருந்த பயங்கரவாதத் தலைவர் கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவுக்கு தக்க பதிலடி தரப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஒருவேளை அமெரிக்கா மீதோ அல்லது அமெரிக்காவுக்குச் சொந்தமான இடங்களிலோ அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால், கடந்த காலங்களில் ஈரானில் பிணைக் கைதிகளாக அடைத்துவைக்கப்பட்டிருந்த 52 அமெரிக்கர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக 52 ஈரானிய தளங்களை குறிவைத்துள்ளோம். அவற்றில் பல ஈரானிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியமிக்க முக்கிய இடங்களாகும். இவை அனைத்தும் அதிவேகமாகவும், பெரும் பலத்துடனும் தாக்கி அழிக்கப்படும் என எச்சரிக்கிறேன் என்று தெரிவித்தார்.