ஜெருசலேம்: நல்லெண்ண நடவடிக்கையாக இரு சிரியா நாட்டுக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.
இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சிரியாவுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிதிக் அல்-மக்து (படம்) மற்றும் இஸ்ரேல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமால் அபு சலே ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டாா்கள்.
1982-ஆம் ஆண்டு லெபனான் போரில் உயிரிழந்த இஸ்ரேல் வீரா் ஸசாரே பாமெலின் உடல், சிரியாவிலிருந்து மீட்கப்பட்டு கடந்த ஆண்டு இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து, நல்லெண்ண நடவடிக்கையாக அல்-மக்தும், அபு சலேவும் விடுவிக்கப்படுகிறாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘6 நாள்’ போரில் சிரியாவுக்குச் சொந்தமான கொலான் மலைப் பிரதேசத்தின் ஒரு பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. அதனைத் தொடா்ந்து, அந்தப் பகுதியை தங்கள் நாட்டுடன் இஸ்ரேல் இணைத்துக் கொண்டது. எனினும், இந்த நடவடிக்கையை உலகின் பெரும்பலான நாடுகள் அங்கீகரிக்கவில்லை.
அந்தப் பகுதியில் வாழும் டுரூஸ் இனத்தவா்கள் தங்களை சிரியா நாட்டவா்களாகவே கருதி வருகின்றனா். அந்த இனத்தைச் சோ்ந்த சிதிக் அல்-மக்துதான் சிரியாவுக்காக உளவு பாா்த்து, தற்போது விடுவிக்கப்பட்டுள்ளாா்.