இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் மார்க்கல் ஆகியோரது அறிவிப்பு குறித்து ஆலோசனை நடத்த அரச குடும்பத்தினருக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரிட்டன் அரச குடும்பத்துக்குள் பூசல்கள் நிலவுவதாக ஊடகங்கள் கூறி வந்த நிலையில், அரச குடும்பத்தின் முதன்மை உறுப்பினர்கள் என்ற அந்தஸ்தைக் கைவிடுவதாக இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகன் மார்க்கலும் அண்மையில் அறிவித்தனர். இதையடுத்து, தனது மகனை கவனித்துக் கொள்வதற்காக மேகன் மார்க்கல் கனடா திரும்பினார்.
இந்த அறிவிப்பும் மேகன் மார்க்கலின் கனடா பயணமும் பிரிட்டனில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. அதேசமயம், இந்த அறிவிப்பு பிரிட்டன் அரசக் குடும்பத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அதிர்ச்சியில் உள்ள குடும்பத்தினரை சமாதானப்படுத்துவதற்காக இளவரசர் ஹாரி மட்டும் தற்போது பிரிட்டனில் தங்கியிருப்பதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த இளவரசர் ஹாரி, ஹாரியின் சகோதரர் வில்லியம் மற்றும் ஹாரியின் தந்தை சார்லஸ் ஆகியோருக்கு இங்கிலாந்து ராணி எலிஸபெத் அழைப்பு விடுத்துள்ளார். அரசு குடும்பத்தின் முதன்மை உறுப்பினர்கள் அந்தஸ்தைக் கைவிடுவதாக இளவரசர் ஹாரி அறிவித்த பிறகு இவர்கள் நால்வரும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறை.