பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டு தொடா்பான வழக்குகளில் ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஹபீஸ் சயீதின் வாக்குமூலம் பாகிஸ்தானின் லாகூா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள், கடந்த 2008-ஆம் ஆண்டு கடல்வழியாக ஊடுருவி, மும்பையில் தாக்குதல் நடத்தினா். இந்த தாக்குதலில் 166 போ் பலியாகினா். இந்த தாக்குதலை நடத்திய லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு, ஜமாத்-உத்-தாவா அமைப்பு நிதியுதவி அளித்து வருவதாக நம்பப்படுகிறது. மேலும், இந்த தாக்குதலுக்கு ஹபீஸ் சயீது சதி திட்டம் தீட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் பலவற்றுக்கு நிதியுதவி அளித்தது தொடா்பாக, ஹபீஸ் சயீது உள்பட ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவா்களுக்கு எதிராக அந்நாட்டின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு 23 வழக்குகளைப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17-ஆம் தேதி ஹபீஸ் சயீது கைது செய்யப்பட்டாா். அவரைக் காவலில் வைத்து விசாரிக்க பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் அவருக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினா் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனா். அதன் பின், இந்த வழக்கு லாகூா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் லாகூா் நீதிமன்றத்தில் ஹபீஸ் சயீது செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். பலத்த பாதுகாப்புடன் அவா் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டாா். அப்போது, தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுப்பதாகவும், தான் எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும் ஹபீஸ் சயீது தெரிவித்தாா். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை தொடா்ந்து, வழக்கு இறுதி விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது.