சீனாவில் கரோனா வைரஸால் தற்போது 830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 41 பேர் இறந்துவிட்டனர்.
சுமார் 11 மில்லியன் மக்கள் வசிக்கும் வுஹானில்தான் இந்த வைரஸ் முதலில் வந்தது. சம்பந்தப்பட்ட நோயாளிகளால் நகரத்தில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன, மருந்தகங்களில் போதிய மருந்துகள் இல்லாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது புதிய மருத்துவமனை ஒன்று கட்டப்பட உள்ளது. அதில் சுமார் 1,000 படுக்கைகள் இருக்கும் என்று மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீன அரசு ஊடகங்கள் ஆன்லைனில் வெளியிட்டுள்ள விடியோ காட்சிகள் 25,000 சதுர மீட்டர் (269,000 சதுர அடி) பரப்பளவைக் கொண்ட இந்த தளத்தில் , ஏற்கனவே வேலைகள் தொடங்கிவிட்ட நிலையில், தோண்டப்பட்ட நிலையைக் காட்டுகின்றன.
இது 2003-ஆம் ஆண்டில் சார்ஸ் வைரஸை சமாளிக்க பெய்ஜிங்கில் அமைக்கப்பட்ட இதேபோன்ற மருத்துவமனையை அடிப்படையாகக் கொண்டது.
"இது அடிப்படையில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையாகும், அங்கு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை அனுப்பப்படுவார்கள், எனவே அது பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் கொண்டுள்ளது" என்று ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் உலகச் சுகாதார மற்றும் சமூக மருத்துவ விரிவுரையாளர் ஜோன் காஃப்மேன் கூறினார்.
ஆறு நாட்களில் சீனா எப்படி ஒரு மருத்துவமனையை உருவாக்க முடியும்?
"இது போன்று போர்க்கால வேகத்துடன் அதி விரைவில் வேலைகளைச் செய்து முடித்த முன் அனுபவம் சீனாவுக்கு உள்ளது" என்று க்ளோபல் ஹெல்த் கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸ் மூத்த ஆராய்ச்சியாளரான யான்ஷோங் ஹுவாங் கூறினார்.
2003-ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஏழு நாட்களில் கட்டப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார், எனவே கட்டுமானக் குழு அந்தச் சாதனையை முறியடிக்க முயற்சிக்கிறது. பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனையைப் போலவே, வுஹான் மையமும் அதிவிரைவாக கட்டி முடிக்கப்படும்.
"அரசு நிர்வாக நடவடிக்கைகள் கிடுக்கிப் பிடியில் உள்ளதால், நிதி பிரச்னைகளை சமாளித்து அனைத்து வளங்களையும் திரட்ட முடியும்."
கட்டுமானத்தை குறித்த நேரத்தில் கட்டி முடிக்க நாடு முழுவதிலும் இருந்து பொறியாளர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று ஹுவாங் கூறினார்.
"பொறியியல் பணியில் சீனா சிறந்து விளங்குகிறது. வானளாவிய கட்டிடங்களை வேகமான அவர்கள் கட்டியிருக்கிறார்கள். இது மேற்கத்தியர்களுக்கு கற்பனை செய்து பார்ப்பது கூட மிகவும் கடினம். எங்களால் இதைச் செய்ய முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.
மருத்துவப் பொருட்களைப் பொறுத்தவரை, வுஹான் மற்ற மருத்துவமனைகளிலிருந்து பொருட்களை எடுத்துக் கொள்ளலாம் அல்லது தொழிற்சாலைகளில் இருந்து எளிதாக ஆர்டர் செய்யலாம்.
வெள்ளியன்று, குளோபல் டைம்ஸ் மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த 150 மருத்துவப் பணியாளர்கள் வுஹானுக்கு வந்திருப்பதை உறுதிப்படுத்தினர். இருப்பினும், புதிய மருத்துவமனை கட்டப்பட்டவுடன் அவர்கள் வேலை செய்வார்களா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சார்ஸ் பிரச்னையின் போது என்ன நடந்தது?
2003-ஆம் ஆண்டில், பெய்ஜிங்கில் சியாடோங்சன் மருத்துவமனை கட்டப்பட்டது. இது சார்ஸ் அறிகுறிகளைக் காட்டும் நோயாளிகளை அனுமதிக்கவும் மேலும் நோய் அறிகுறிகளைக் கண்டறியவும் இது ஏழே நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. ஒரு மருத்துவமனையை இத்தகைய வேகத்துடன் கட்டி முடித்ததால் இது உலக சாதனையாகக் கருதப்பட்டது.
சுமார் 4,000 பேர் மருத்துவமனையை கட்டியெழுப்ப பணிபுரிந்தனர், காலக்கெடுவை பூர்த்தி செய்வதற்காக பகல் மற்றும் இரவு முழுவதும் வேலை செய்தனர் என்று China.com.cn இணையதளம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையின் உள்ளே ஒரு எக்ஸ்ரே அறை, சி.டி அறை, தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் ஆய்வகம் உள்ளது. ஒவ்வொரு வார்டிலும் தனி குளியலறைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இரண்டு மாதங்களுக்குள், ஏழில் ஒரு பங்கு சார்ஸ் நோயாளிகளை அதில் அனுமதித்தது. சீன ஊடகங்களால் "மருத்துவ வரலாற்றில் ஒரு அதிசயம்" என்று பாராட்டப்பட்டது.
திருமதி காஃப்மேன் கூறுகையில்: "இது சுகாதார அமைச்சகத்தால் உத்தரவிடப்பட்டது. பிற மருத்துவமனைகளிலிருந்து இங்கு வந்து பணிபுரிந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களால் இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. மேலும் சுகாதார அமைச்சகத்தின் உத்தரவுகள்படி தொற்று நோய்களை எவ்வாறு கையாள்வது மற்றும் வைரஸை அடையாளம் காணும் முக்கியமான வழிமுறைகள் யாவும் கூறப்பட்டன. குறிப்பிட்ட வகை சார்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
சார்ஸ் தொற்றுநோய் பிரச்னையின்போது, அதன் செலவுகளுக்கு உள்ளூர் மற்றும் மாநிலத்தில் இருந்து நிறைய மானியங்கள் கிடைத்தன, அவை ஊழியர்களின் சம்பளச் செலவுகளிலிருந்து கட்டிடம் வரை சமாளிக்க உதவியது.
"என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை, எனினும் நிதிச் சுமை வுஹான் அரசாங்கத்தின் மீதுதான் விழும், ஏனெனில் இது எதைவிடவும் மிக முக்கியம்" என்று திருமதி காஃப்மேன் கூறினார்.
ஹுவாங்கின் கூற்றுப்படி, அந்த மருத்துவமனை அதன் நோக்கம் முடிந்த பின் அமைதியாக கைவிடப்பட்டது.