அமெரிக்கா உலகச் சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதற்கான செயல்முறையை தொடங்கியுள்ளதாக அந்நாடு ஐ.நா.விடம் அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இச்செயல் பன்னாட்டுச் சமூகத்தில், பல கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
இது பற்றி, ஜெர்மன் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் பேசுகையில், அமெரிக்காவின் இச்செயல், சர்வதேச ஒத்துழைப்பு முன்னேற்றப் போக்கில் தடையை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
தி லான்செட் எனும் பிரிட்டன் மருத்துவ இதழின் தலைமைப் பதிப்பாசிரியர் ரிச்சார்ட் ஹோர்டன் பேசுகையில், அமெரிக்கா, உலகச் சுகாதார அமைப்பின் முக்கிய உறுப்பு நாடுகளில் ஒன்றாகும். இந்நிலையில் அமெரிக்க அரசு எடுத்திருக்கும் முடிவானது உலக மக்கள் மீதான வன்முறைச் செயலாகும் என்றும், அமெரிக்காவின் இம்முடிவை எதிர்த்து அந்நாட்டின் அறிவியல் மற்றும் மருத்துவத் துறை போராட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கொவைட்-19 தொற்றுநோய் இன்னும் உலகளவில் பரவி வருகிறது. அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கக் கண்டப் பகுதிகளில் கரோனா தொற்று கடுமையான நிலையில் இருந்து வருகின்றது.
தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் பணி முக்கிய தருணத்தில் இருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில், அமெரிக்கா, உலகச் சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது பொறுப்பற்ற செயலாகும். உண்மையில், அமெரிக்காவின் இந்த முடிவு, அந்நாட்டுக்கே நன்மையளிக்கப் போவதில்லை. வைரஸுக்கு நாட்டு எல்லை என்பது இல்லை.
வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஒத்துழைப்பு மேற்கொண்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். தற்போது அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் கடுமையாகவுள்ளதால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்கா, உலகச் சுகாதார அமைப்பில் இருந்து விலகி, தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் செயலானது இறுதியில் அமெரிக்காவின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்