அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,067 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கில் இங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்த நாட்டில் வியாழக்கிழமை மட்டும் இதுவரை இல்லாத வகையில் 61,067 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 61,067 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 32,19,999 ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 960 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,35,822 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை 14,26,428 பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த இரு தினங்களாக பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.