வாஷிங்டன்: அலாஸ்கா தீபகற்பத்தில் இன்று காலை மிகப் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று காலை 6.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் பதிவான ரிக்டர் அளவு கோலின் அடிப்படையில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதால், நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்து 300 கி.மீ. தொலைவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பல மைல் தொலைவுக்கு உணரப்பட்டுள்ளது.
1964ஆம் ஆண்டு மார்ச் மாதம் அலாஸ்காவில் 9.2 ரிக்டர் அளவில் மிகப்பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. வடஅமெரிக்காவில் பதிவான மிகப் பயங்கர நிலநடுக்கம் இதுவாகும். அப்போது நிலநடுக்கம் மற்றும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி காரணமாக 250 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.