அமெரிக்காவில் 2016 அரசுத் தலைவர் தேர்தலின்போது கட்சியின் வேட்பாளர்கள் தேர்விலும் சரி, அரசுத் தலைவர் தேர்தல் பிரசாரத்திலும் சரி அதிரடியான கருத்துகளை வெளியிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தவர் குடியரசுக் கடசியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப்.
அவற்றில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற முழக்கமே மேலோங்கியிருந்தது. அதில் வெள்ளை இனத்தவர்களுக்கு முன்னுரிமை என்ற ஊடுபொருள் படர்ந்திருந்தது.
பின்னர், குறிப்பிட்ட ஒரு மதத்தினர் மீது குற்றம் சாட்டி, மதவாதத்தில் ஈடுபட்டது என கடுமையான விமர்சனங்களை எழுப்பக் கூடிய கருத்துகளைத் தெரிவித்து மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்தவர்தான் டிரம்ப். ‘ஜனநாயக நாடு, மத இன பேதமின்றி அனைவரும் சமம், மாற்றுக் கருத்துக்கும் வரவேற்பு,’ என்பது அமெரிக்காவின் நெறியான அரசியல். ஆனால், வரலாற்றிலேயே தரம் தாழ்ந்த பிரசாரம் 2016 தேர்தல் பிரசாரம் அமைந்துவிட்டது என்று முன்னாள் அரசியல்வாதிகளும் நிபுணர்களுக்கும் மனவேதனையுடன் கருத்து தெரிவித்தனர். அந்த வகையில் டிரம்ப் செயல்பட்டார்.
ஆனால், கடந்த 4 ஆண்டு ஆட்சியிலும் அத்தகைய நிலைமை இல்லாமல் இல்லை. குறிப்பாக, தற்சமயம் டிரம்பின் ஆட்சியில் முன்பு இல்லா அளவுக்கு தவறான பாதையில் அமெரிக்கா சென்று கொண்டிருக்கிறது என்று அமெரிக்கர்கள் கூறும் அளவுக்கு அரசின் செயல்பாடு உள்ளது.
ஏபி செய்தி ஊடகமும், மக்கள் விவகார ஆய்வுக்கான என்ஓஆர்சி மையமும் நடத்திய கருத்துக் கணிப்பில் 10 பேரில் 8 பேர் இக்கருத்தை எதிரொலித்தனர். மேலும், டிரம்பை விட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வலுவான நிலையில் உள்ளார்.
கொவைட்-19 நோய் தொற்றுக் கட்டுப்பாட்டில் டிரம்ப் அரசு மிகவும் கீழ்நிலைக்குச் சென்று விட்டது. 32 சதவீதத்தினர் மட்டுமே அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பொருளாதாரத்தைக் கையாள்வதிலும் பின்னடைவு. 38 சதவீதத்தினர் மட்டும் அமெரிக்காவின் பொருளாதாரம் நன்றாக உள்ளது என்று மொழிந்துள்ளனர். ஆனால், இது ஜனவரியில் 67 சதவீதமாக இருந்தது.
மக்களிடையே பெரும் சரிவை டிரம்ப் சந்தித்துள்ளது இதன்மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், அரசுத் தலைவராகப் பணியாற்ற விதத்திலும் டிரம்ப்புக்குப் பின்னடைவே. உலக நாடுகள் அனைத்தும் முகக்கவசம் அணிந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டு வந்த வேளையில், முகக்கவசம் வேண்டாம் என்று டிரம்ப் வாதிட்டு வந்தார். ஆனால், 4இல் 3 அமெரிக்கர்கள் முகக் கவசத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
வேறுவழியில்லாமல் தற்போது முகக் கவசம் அணியத் தொடங்கினார். இதிலும், அவருக்குப் பின்னடைவு. சர்வ வல்லமை கொண்ட நாடான அமெரிக்கா, கொவைட்-19 தொற்றுநோய் கட்டுப்பாட்டில் தடுமாறி வருகிறது. இது உள்நாட்டு மக்களுக்கு வாழ்வா, சாவா என்ற நிலையை உண்டாக்கி விட்டது. ‘அமெரிக்காவிலேயே இப்படியா,’ என்று உலக நாடுகள் கேட்கும் அளவுக்கு நிலைமை சென்று விட்டது. இப்படி, டிரம்புக்கு எதிரான காரணிகள் குவிந்து கொண்டே வருகின்றன.
இக்காரணிகள் எல்லாம் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக மாறி வருகிறது. “அரசின் இயலாத் தன்மை கண்டு மக்கள் மனநிறைவின்மையில் உள்ளனர். டிரம்பின் சுயநல அரசியலை மட்டுமே மக்கள் காண்கின்றனர்”, என்று ஜனநாயகக் கட்சியின் பிராசார துணை மேலாளர் கேத் பெடிங்பீல்டு தெரிவித்துள்ளார். கடந்த நான்கு மாதங்களில் எதிர்க்கட்சி வேட்பாளர் பிடனுக்கான ஆதரவு பெருகியுள்ளது.
இருப்பினும், “டிரம்ப் ஒரு பச்சோந்திபோல, சூழலுக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு எதிர்வினை ஆற்றுவார்,” என்று நியூயார்க் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. ஆயினும், “அத்தகைய மாற்றம் மக்களின் நம்பிக்கையை ஈட்டும் அளவுக்குப் போதாது,” என்று ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது.
அரசுத் தலைவர் தேர்தலுக்கு இன்னும் 100 நாள்களே உள்ளன. தங்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்க அமெரிக்கர்கள் தயாராகி வருகின்றனர். டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்படுவரா என்ற கேள்விக்கான பதில் காலத்திடம்தான் உள்ளது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்