பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தைச் சேர்ந்த நபர், குடும்பச் சண்டையில் தனது இரண்டு மனைவிகள், மகன், மகள், மருமகள் என ஐந்து பேரை கொலை செய்துள்ளார்.
கொலைச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்து விரைந்து சென்ற பாகிஸ்தான் காவல்துறையினர் மீது, அந்த நபர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதை அடுத்து, காவலர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில், அந்த நபர் பலியானார். இந்த சம்பவத்தில் இரண்டு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. பலியான நபர் ஜெஹன்ஸேப் சுர்கேலி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
சில நாள்களுக்கு முன்பு, இவர்களது குடும்பத்தினருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரம் அடைந்த சுர்கேலி, துப்பாக்கியால், தனது இரண்டு மனைவிகள், மகன், மகள், மருமகளை சுட்டுக் கொன்றுள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்து விரைந்து வந்த காவல்துறையினர், அவரைக் கைது செய்ய முயன்ற போது, அதே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் நான்கு பேரை பிணைக் கைதிகளாக அவர் பிடித்துவைத்துக் கொண்டார். காவலர்களை நோக்கி சுர்கேலி துப்பாக்கிச் சூடு நடத்தினர், காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தி, சுர்கேலியை சுட்டுக் கொன்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சுர்கேலி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.