'நீதியைப் பெற இது தீர்வல்ல' - போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைக்கு ஒபாமா கண்டனம்

கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்துக்கு எதிரான போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைக்கு  அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார். 
'நீதியைப் பெற இது தீர்வல்ல' - போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைக்கு ஒபாமா கண்டனம்

கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்துக்கு எதிரான போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பல ஆண்டுகளாக காவல்துறை மற்றும் நீதித் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள தவறியதை இந்தப் போராட்டங்கள் உணர்த்துகின்றன. போராட்டங்கள் போராட்டக்காரர்களின் நியாயமான விரக்தியை எடுத்துரைக்கின்றன. அதே நேரத்தில் போராட்டங்கள் மிகவும் நேர்மையான முறையில் இருக்க வேண்டும். போராட்டத்தில் வன்முறை என்பது கண்டிக்கத்தக்கது. போராட்டக்காரர்கள் வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. 

எதிர்ப்பின் முக்கிய அம்சம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நீதியைப் பெறுவதும் ஆகும். போராட்டத்தின் மூலம் அநீதியை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும். எதிர்ப்புகளின் பலன்களை சட்டங்கள் மற்றும் நடைமுறைகளாக மாற்ற வேண்டும். குற்றவியல் நீதி, காவல்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தப் போராட்டங்களுக்கு உடனடியாக அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, அமெரிக்காவில் மினசோட்டா தலைநகர் மினியாபொலிஸில் 46 வயதான ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கருப்பினத்தவர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அமெரிக்காவில் பெரும்பாலான இடங்களில் போராட்டங்களும், ஒரு சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாகவும் வெடித்துள்ளன. போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 4 ஆயிரம் பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டின் கரோனா தொற்றோடு போராட்டமும் தீவிரமாகப் பரவி வருவதால் இரண்டையும் கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com