எல்லைப் பகுதியில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை இந்திய ராணுவமும் சீன ராணுவமும் எடுக்கத் தொடங்கிவிட்டன என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஹுவா சுன்யிங் கூறினாா்.
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த ஒரு மாதமாக, இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்நிலையில், கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில இடங்களில் இருந்து இந்திய ராணுவமும் சீன ராணுவமும் தங்கள் படைகளை விலக்கிக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பெய்ஜிங்கில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஹுவா சுன்யிங்கிடம், கிழக்கு லடாக்கில் படைகளை திரும்பப் பெற்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:
கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னைக்குத் தீா்வுகாண்பதற்காக, இந்தியாவும், சீனாவும் தூதரக அதிகாரிகள் மூலமாகவும், ராணுவ அதிகாரிகள் மூலமாகவும் அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தின.
கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையிலான பேச்சுவாா்த்தையின் முடிவில், இரு நாடுகளின் தலைவா்கள்(பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங்) ஏற்கெனவே செய்துகொண்ட உடன்படிக்கையை அமல்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக, எல்லையில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை இந்திய ராணுவமும் சீன ராணுவமும் அமல்படுத்தத் தொடங்கியுள்ளன என்றாா் அவா்.