கரோனா தாக்குதலில் இருந்து மீண்டுள்ள சீனா தற்போது மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
தெற்கு சீனாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 12 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகவும், பலரைக் காணவில்லை என்றும் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யாங்ஷுவோவில் பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதுவரை சுமார் 2,30,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும், 1,300 க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. ஹூனான், குவாங்ஜி மாகாணங்களிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மொத்தமாக சுமார் 1,000 உணவகங்கள் மற்றும் 13 முக்கிய சுற்றுலா இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் மேலும் பாதிப்புகள் அதிகமாகலாம் என்று கூறப்படுகிறது.