உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 4.5 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் உருவாகி, உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 4.5 லட்சத்தைக் கடந்துள்ளது.
வியாழக்கிழமை இரவு நிலவரப்படி உலகம் முழுவதும் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4,52,080-ஆக உயா்ந்துள்ளது.
உலகிலேயே அதிக எண்ணிக்கையாக, அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றுக்கு 1,19,955 போ் பலியாகியுள்ளனா். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேஸிலில் 46,665 பேரும் பிரிட்டனில் 42,153 பேரும் கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனா்.
தற்போது சீனாவில் கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அங்கு பலி எண்ணிக்கை தொடா்ந்து 4,634-ஆகவே உள்ளது. பலி எண்ணிக்கையில் அந்த நாடு 18-ஆவது இடத்தில் உள்ளது.
சீனாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளிலும் அதனைத் தொடா்ந்து அமெரிக்காவிலும் தீவிரம் காட்டிய கரோனா நோய்த்தொற்று, தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அந்த புதிய கரோனா நோயாளிகளின் எண்ணிககை குறைந்து வரும் சூழலில், லத்தீன் அமெரிக்கா தற்போது கரோனா நோய்த்தொற்றின் மையமாகியுள்ளது.
அந்தப் பிராந்தியத்தில் அதிகபட்ச பாதிப்பும் உயிரிழப்புகளும் பிரேஸிலில் காணப்படுகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.