துபை: துபையில் வசித்து வந்த இந்திய தொழிலதிபரும், அவரது மனைவியும், பாகிஸ்தானைச் சேர்ந்த கொள்ளையனால், அவர்களது பங்களாவில் குத்திக் கொலை செய்யப்பட்டனர்.
சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஹிரெண் ஆதியா - விதி ஆதியா தம்பதி இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அரேபியன் ராஞ்சர்ஜ் பகுதியில் உள்ள பங்களாவில் வசித்து வந்தனர். அவர்கள் வீட்டில் கொள்ளையடிக்க வந்த பாகிஸ்தான் கொள்ளையனால் மிக மோசமாக குத்திக் கொல்லப்பட்டச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் நடந்து 24 மணி நேரத்தில் குற்றவாளியை துபை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து, இந்திய தம்பதியின் மகள், காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தார். விரைந்து சென்ற காவல்துறையினர் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பியுள்ளனர். இவர்கள் தங்களது 18 மற்றும் 13 வயது மகள்களுடன் வசித்து வந்துள்ளனர். ஜூன் 18-ம் தேதி வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த கொள்ளையன் தம்பதியைக் கொன்று பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளான்.
உடனடியாக விசாரணைத் தொடங்கிய காவல்துறையினர், குற்றவாளியைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், ஒரு ஆண்டுக்கு முன்பு வரை குற்றவாளி அந்த பங்களாவில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்ததாகவும், அப்போது அவர்களிடம் அதிக பணம் இருப்பதைப் பார்த்து, கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும் கூறியுள்ளான்.