ஆப்கானிஸ்தானில் ராணுவம் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானின் வடக்கு பால்க் மாகாணத்தில் உள்ள தவ்லத் அபாத் கிராமத்தில் தலிபான்களைக் குறிவைத்து அந்நாட்டு ராணுவம் புதன்கிழமை இரவு வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் முனீர் அகமது ஃபர்ஹாத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தாக்குதலின்போது அருகிலிருந்த விவசாயி ஒருவரது வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் ஒரு பெண், குழந்தை உட்பட நான்கு பேர் பலியானதாகவும் ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த தகவலை ராணுவ தரப்பினர் நிராகரித்துள்ளனர்.
அதேசமயம், 25 தலிபான்கள் கொல்லப்பட்டது குறித்து தலிபான் தரப்பில் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.