விண்வெளிக்குச் சென்ற நாசா விண்வெளி வீரர் ஒருவர் அங்கு தனது கண்ணாடியை தவற விட்டுள்ளார். இருப்பினும் இதனால் விண்வெளி மையத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என நாசா கூறியுள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தில் பேட்டரிகளை மாற்றுவதற்காக அமெரிக்காவின் விண்வெளி கமாண்டர் கிறிஸ் கேசிடி மற்றும் பாப் பென்கென் ஆகியோர் விண்வெளிக்குச் சென்றனர்.
விண்வெளி மையத்தில் இருந்து வெளியே செல்லும்போது, தங்களது விண்வெளி உடையுடன் இணைக்கப்பட்ட நிலையில் மணிக்கட்டு பகுதியில் ஒரு கண்ணாடியை வைத்திருப்பர். பேட்டரி மாற்றும் பணியில் ஈடுபட்டபோது, கமாண்டர் கிறிஸ் கேசிடி தனது கண்ணாடியை தவறவிட்டுள்ளார். அது விண்வெளியில் மிதந்து சென்றது. பூமியைச் சுற்றி வரும் மில்லியன் கணக்கான குப்பைகளுடன் அது சேர்ந்ததாக நாசா கூறுகிறது.
கண்ணாடியை தவறவிட்ட நிலையிலும், 6 மணி நேரம் பணியை முடித்துவிட்டு வீரர்கள் திரும்பியுள்ளனர். மேலும், இதனால் விண்வெளி மையத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி மையத்தில் காலாவதியான நிக்கல்-ஹைட்ரஜன் பேட்டரிகளுக்கு பதிலாக அதிநவீன மூன்று புதிய லித்தியம்- அயன் பேட்டரிகளை வீரர்கள் பொறுத்தியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.