அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,000-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு இங்கு ஆயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தரவுகளை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 355 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு 1,26,123 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 42,000-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.
அங்கு இதுவரை 26.8 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 11.2 லட்சம் பேர் வரையில் குணமடைந்துள்ளனர்.