ஜெனீவா: உலக அளவில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கை 1,89,000-ஆக பதிவானது. கரோனா தினசரி பாதிப்பில் இது புதிய உச்சம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு, கடந்த 22-ஆம் தேதி சுமாா் 1,83,000 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. அதுவே, தினசரி அதிகபட்ச பாதிப்பாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 1,89,000 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதில், அதிகபட்சமாக பிரேசிலில் 46,800 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அடுத்ததாக, அமெரிக்காவில் 44,400 பேருக்கும், இந்தியாவில் 19,906 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 26 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அடுத்த இடத்தில் உள்ள பிரேசிலில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.