சீனாவை தவிர்த்து மற்ற நாடுகளில் கடந்த 24 மணிநேரத்தில் 1500 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் காரணமாக அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது. அந்த வைரஸ் பரவலை சா்வதேச சுகாதார அவசர நிலையாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கடந்த மாத இறுதியில் அறிவித்தது.
மேலும், ‘கரோனா வைரஸ்’ என்ற பொதுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த அந்த வைரஸுக்கு ‘கொவைட்-19’ என்று அந்த அமைப்பு பெயரிட்டது. 2020-ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து சீனாவை ஆட்டிப்படைத்து வந்த கரோனா வைரஸின் தாக்கம் தற்போது அந்நாட்டில் சற்று தணிந்துள்ளது. அதேவேளையில், தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட மற்ற நாடுகளில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் சீனாவை தவிர்த்து மற்ற நாடுகளில் கடந்த 24 மணிநேரத்தில் 1500 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் கொவைட்-19’ வைரஸுக்கு சீனாவை தவிர்த்து உலகளவில் சுமார் 64 நாடுகளில் இதுவரை 8774 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதேசமயம் 128 பேர் பலியாகியுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.