கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அமெரிக்காவில் அவசர நிலையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில், அமெரிக்காவுக்கான இந்திய தூதரகம், சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் தங்கி பயிலும் இந்திய மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் தங்களது மாணவர்கள் விடுதியை மூட நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் அதனால் பாதிக்கப்படும் இந்திய மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று காரணமாக அமெரிக்காவில் அவசர நிலையை வெள்ளிக்கிழமை அறிவித்தார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
மேலும் உலகளாவிய கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று அச்சம் காரணமாக, இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்கும் நடைமுறை மார்ச் 16ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.