உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தைக் கடந்து 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,39,654 ஆக உள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,11,942 ஆக உள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 19,744 ஆக உள்ளது.
சீனா, ஈரானுக்குப் பிறகு அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உருவெடுத்த இத்தாலி தற்போது பலியானோரின் எண்ணிக்கையில் முதல் நாடாக உள்ளது. அங்கு இதுவரை 6,820 பேர் பலியாகியுள்ளனர்.
இதன்பிறகு, அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உருவெடுத்த ஸ்பெயின் நாட்டின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது அதிகம் பலியானோரின் எண்ணிக்கையில் சீனா மற்றும் ஈரானைப் பின்னுக்குத் தள்ளிய ஸ்பெயின் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 3,434 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் இன்று ஒருநாள் மட்டும் 443 பேர் பலியாகியுள்ளனர்.
ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக இன்று ஒருநாளில் அதிகம் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் ஈரான் உள்ளது. ஈரானில் இன்று மட்டும் 143 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப்-10 நாடுகள்:
சீனா - 81,218
இத்தாலி - 69,176
அமெரிக்கா - 55,081
ஸ்பெயின் - 47,610
ஜெர்மனி - 35,353
ஈரான் - 27,017
பிரான்ஸ் - 22,304
ஸ்விட்சர்லாந்து - 10,537
தென் கொரியா - 9,173
இங்கிலாந்து - 8,227