பிரிட்டனில் வீட்டை விட்டு வெளியே வந்தால் மொபைல் செய்தி மூலமாக எச்சரிக்கை விடுப்பதோடு அபராதமும் விதிக்கப்படுகிறது.
கரோனா பரவலைத் தடுக்க ஒவ்வொருவரும் ஆறடி விலகியிருக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே தடை விதிக்கப்படும் என பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்னதாக கூறியிருந்தார்.
முதியவர்களும், சிக்கலான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் வெளியே வர வேண்டாம் என்றும், மற்றவர்களும் அத்தியாவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
எனினும், மக்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி பொது இடங்களில் கூடியதால் தற்போது அங்கு வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, யாரேனும் வீட்டை விட்டு வெளியே வந்தால், அவர்களது மொபைல் எண்ணுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி செல்கிறது. 'நீங்கள் மூன்று முறை வீட்டை விட்டு வெளியே வந்துள்ளீர்கள். இதற்காக நீங்கள் 30 பவுண்ட் அபராதம் செலுத்த வேண்டும்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கரோனா பரவலைத் தடுக்க வீட்டிலேயே இருக்குமாறு மொபைல் மூலமாக எச்சரிக்கை செய்தி ஒன்றும் அனுப்பப்படுகிறது. பிரிட்டன் அரசின் ஊரடங்கு விதிமுறைகள் குறித்த இணையதள லிங்க்கும் அத்துடன் அனுப்பப்படுகிறது.
மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தடுக்க அவர்களது மொபைல் எண்ணை பின்தொடர்ந்து பிரிட்டன் அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.