பிரிட்டனில் கரோனா அறிகுறிகள் தென்பட்டதும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட வங்கியாளர் ஒருவர் வெறும் இரண்டு நாள்களில் உயிரிழந்தார்.
வேல்ஸைச் சேர்ந்த 47 வயதான டிம் கேலிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு விருந்துக்குச் செல்லும்போது லேசான தொண்டைக் கரகரப்பு இருந்தது.
திங்கள்கிழமை அவருக்குக் காய்ச்சல் வந்தது. இதைத் தொடர்ந்து, வீட்டிலேயே தங்கிய கேலி, தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
ஆனால், கெடுவினையாக வேல்ஸிலுள்ள ரெக்ஸாம் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை அவர் இறந்துகிடந்தார். உயிரற்ற உடலைப் பாதுகாப்பாக மருத்துவப் பணியாளர்கள் கொண்டுசென்றனர்.
கரோனா தொற்று காரணமாகத் தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொண்டதால் கடைசியாக ஒரு முறை அவரைப் பார்க்கக் கூட முடியாமல் போய்விட்டது என்று மனமுடைந்த அவருடைய தோழி டோனா கத்பெர்ட் தெரிவித்துள்ளார்.
அவருக்கு உடல் நலிந்ததுமே ஆம்புலன்ஸை அழைக்குமாறு தொலைபேசியில் கூறினேன். ஆனால், தான் நலமாக இருப்பதாக கேலி கூறிக்கொண்டிருந்தார் என்றார் டோனா.
சந்திக்க முடியாமல் இருப்பது பற்றிக் கவலை தெரிவித்தபோது, முட்டாள்தனமாகப் பேசாதே என்று கண்டித்தார் அவர்.
"செவ்வாய்க்கிழமை காலையில் என்னுடைய தொலைபேசி அழைப்பை அவர் எடுக்கவில்லை என்றதுமே கலவரமாகிவிட்டது. பக்கத்து வீட்டுக்காரரை அழைத்துப் பார்க்கச் சொன்னேன். அவர் படுக்கையில் கிடப்பதைக் கண்டனர்" என்றார் டோனா.
எல்லாவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் எடுத்துக்கொண்டார். ஆனாலும் அவருக்கு கரோனா தொற்றிவிட்டது. என் இதயமே சுக்குநூறாகிவிட்டது என்று அவருடைய தாய் தெரிவித்துள்ளார்.