சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கடந்த சில நாள்களாக வார்த்தை மோதல்கள் ஏற்பட்டு வந்தன.
அமெரிக்கத் துணை அரசுத் தலைவர் மைக் பென்ஸ் திங்கட்கிழமை கூறுகையில்,
புதிய ரக கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் சீனாவின் செயல்கள் மேலும் வெளிப்படையாக உள்ளன என்றார். அதே நாள், டிரம்ப் பதிவேற்றிய சுட்டுரையில், “சீன வைரஸ்” என்பதைத் தவிர்த்து வைரஸ் என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்தினார்.
“சீன வைரஸ்” என்பதை டிரம்ப் பயன்படுத்திய பிறகு அமெரிக்காவில் சீனர்கள் தாக்கப்பட்டனர். அத்துடன், அமெரிக்காவிலுள்ள ஆசிய மக்கள் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் சூழல் ஏற்பட்டது என்று நியூயார்க் டைம்ஸ் இதழில் கூறப்பட்டது.
டிரம்ப்புக்கு அரசியல் நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆசிய வம்சாவழி அமெரிக்க வாக்காளர்கள் வேகமாக அதிகரித்து வருகின்றனர். அவர்களின் வாக்குகளைப் பெற ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சி பாடுபட்டு வருகின்றன என்று வோக்ஸ் செய்தி இணையம் கூறியது.
சர்வதேச அளவில் சீனாவுடனான நட்புறவின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றைச் சமாளிப்பதற்கு அமெரிக்காவிடம் போதிய மருத்துவப் பொருட்கள் இல்லை. சீனாவிலிருந்து முகக் கவசங்கள் மற்றும் நோய்த்தொற்று தடுப்புக்கான பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா விரும்புகிறது. இந்த நேரத்தில், சீனாவுடன் சீரான உறவை நிலைநிறுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது.
தடுப்பூசி ஆய்வு மற்றும் வளர்ச்சி, நோய்த்தொற்று தடுப்பு ஆகியவை நீண்டகாலப் பணிகளாகும். மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகளின் நிலையான வினியோகம் இதற்கு தேவை. இரு நாடுகளுக்கு இடையில் உறுதியான பணித் தொடர்பை நிலைநிறுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தொற்று நோயை ”சீன வைரஸ் “ என அழைப்பது மேற்கூறிய இலக்குகளை நனவாக்கத் துணைபுரியாது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்